செய்திகள்
கோப்புபடம்

நொய்யல் அருகே புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-09-22 15:09 GMT   |   Update On 2021-09-22 15:09 GMT
நொய்யல் அருகே புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்:

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள கோம்பு பாளையத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி பார்வதி. முனுசாமி கடந்த 3 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் கார்த்திக்(வயது 32) ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர், புதுச்சேரியை சேர்ந்த நித்யா என்ற பெண்ணை காதலித்து கடந்த 8 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.

கார்த்திக்குக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த நித்யா, அவரிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டார். இதனால், கடந்த 20 நாட்களாக மதுகுடிப்பதை நிறுத்தி விட்டு வேலைக்கு சென்று வந்த கார்த்திக், மனைவி பிரிந்து சென்றதால் சம்பவத்தன்று மீண்டும் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது.

அப்போது பார்வதி முதியோர் உதவித்தொகை பெற அருகே உள்ள வங்கிக்கு சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பியபோது வீட்டின் மேற்கூரையில் உள்ள இரும்பு குழாயில் கார்த்திக் தூக்குப்போட்டு கொண்டு தொங்கினார். இதனை பார்த்து அலறிய பார்வதியின் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து கார்த்திக்கை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கார்த்திக்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் பார்வதி கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 8 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News