செய்திகள்
உடுமலை மலைவாழ்கிராமங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு
மலைவாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, சாதி சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட நடைமுறைகளை கலெக்டர் ஆராய்ந்தார்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொருப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, மாவடப்பு, தளிஞ்சி, தளிஞ்சிவயல், குளிப்பட்டி, குருமலை, மேல் குருமலை, காட்டுப்பட்டி கருமுட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.
வனப்பகுதியில் விவசாயம் செய்வதே இவர்களின் பிரதான தொழிலாக இருக்கிறது. இதற்கு பருவமழையும் ஆறுகளில் ஏற்படுகின்ற நீர்வரத்தும் கைகொடுத்து உதவுகிறது.
மேலும் இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பருவநிலை மாற்றத்தால் இயற்கை இடர்பாடுகள், வனவிலங்குகளால் ஏற்படுகின்ற இடையூறுகள் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளை வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து செய்து தருகின்றனர்.
அந்தவகையில் கலெக்டர் வினீத் மலைவாழ்கிராமங்களான கோடந்தூர் மற்றும் பொருப்பாறு பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மலைவாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, சாதி சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட நடைமுறைகளை ஆராய்ந்தார்.
அப்போது நீண்டநாள் கோரிக்கையான கூட்டாற்றில் பாலம் அமைத்து தருவது குறித்து முன்வைக்கப்பட்டது. அப்போது ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம், உடுமலை தாசில்தார் ராமலிங்கம் உள்பட வருவாய் மற்றும் வனத்துறையினர் உடனிருந்தனர்.