செய்திகள்
யானை

மதுக்கரை அருகே யானை தாக்கி காவலாளி பலி

Published On 2021-07-27 08:14 GMT   |   Update On 2021-07-27 08:14 GMT
கோவை மதுக்கரை அருகே இன்று அதிகாலையில் யானை தாக்கியதில் காவலாளி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்
கோவை:

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 62). இவர் கோவைப்புதூரில் உள்ள தனியார் குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முத்துசாமிக்கு இரவு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. இதற்காக அவர் நேற்று மாலை வீட்டில் இருந்து புறப்பட்டு பணிக்கு சென்றார். இரவு முழுவதும் பணியில் இருந்த முத்துசாமி அதிகாலை 5 மணியளவில் குடியிருப்பை விட்டு வெளியே வந்தார். அப்போது அந்த வழியாக ஒற்றை யானை வந்து கொண்டு இருந்தது.

இருட்டில் திடீரென யானை வருவதை பார்த்த முத்துசாமி அதிர்ச்சியடைந்தார். பின்னர் யானையிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார். ஆனால் யானை முத்துசாமியை விரட்டி சென்று துதிக்கையால் தாக்கி தூக்கி வீசியது. பின்னர் காலால் மிதித்து கொன்றது. இதில் சம்பவ இடத்திலேயே முத்துசாமி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மதுக்கரை வனத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் யானை தாக்கி இறந்த முத்துசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காவலாளியை யானை மிதித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News