செய்திகள்
கைது

தமிழக வனக்காவலர்களை தாக்கிய கேரள வாலிபர் கைது

Published On 2021-07-21 12:00 GMT   |   Update On 2021-07-21 12:00 GMT
தமிழக வனக்காவலர்களை தாக்கிய கேரள வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக- கேரள மாநில எல்லையில் செல்லார்கோவில் மெட்டு வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் கம்பம் மேற்கு வனவர் இளவரசன் தலைமையில் வனகாவலர் காஜாமைதீன் உள்பட 5 பேர் கடந்த மாதம் 30-ந்தேதி இரவு ரோந்து சென்றனர்.

அப்போது செல்லார் கோவில் பகுதியில் ஒரு மர்ம கும்பல் வனவிலங்குகளை வேட்டையாடபதுங்கி இருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடிக்க முயன்றபோது அந்த கும்பலில் இருந்து ஒருவர் துப்பாக்கியால் தமிழக வனத்துறையினர் மீது சுட்டார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதன் பிறகு தப்பி ஓடிய மர்ம நபர்கள் கேரள வனப்பகுதிக்கு சென்றனர்.

மேலும் அவர்கள் வனத்துறையினரை தாக்க முயன்று தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து விசாரணை நடத்த தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். துப்பாக்கி சூடு நடத்தியவர்களை தேடி வந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான ஒருவர் கேரள மாநிலத்தில் இருந்து லோயர்கேம்ப் வழியாக ஓசூருக்கு தப்பி செல்ல முயன்றார். அவர் சோஜன் (வயது34) என தெரிய வந்தது.

தனது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து வனப் பகுதியில் வேட்டையாட வந்ததும் தமிழக வனத்துறையினரை தாக்கியதையும் ஒத்துக்கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News