செய்திகள்
பள்ளி சீருடை ஆர்டர்கள் வழங்க விசைத்தறியாளர்கள் கோரிக்கை
சீருடை ஆர்டர்களை விசைத்தறிக்கு வழங்குவதன் மூலம் இதை சார்ந்த உரிமையாளர்கள் மற்றும் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
பல்லடம்:
திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பால சுப்ரமணியம் கூறியதாவது:-
விசைத்தறி தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. அரசு பள்ளி சீருடை ஆர்டர்களை விசைத்தறிகளுக்கு வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
ஆனால் அதற்கான வாய்ப்பை வழங்க வில்லை. அரசு சார்பில் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை ஆர்டர்கள் கைத்தறிக்கும், சீருடைகள் ஆட்டோ லூம்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. தொழிலாளர் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் விசைத்தறி தொழில் முதன்மை வகிக்கிறது.
சீருடை ஆர்டர்களை விசைத்தறிக்கு வழங்குவதன் மூலம் இதை சார்ந்த உரிமையாளர்கள் மற்றும் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தறிகளை மேம்படுத்த மத்திய அரசு மானியம் வழங்கியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
அதன்பின் எந்த சலுகையும் கிடைக்கவில்லை. வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்பதால், சீருடை ஆர்டர்களை விசைத்தறிகளுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.