செய்திகள்
கோப்புபடம்

ராமநாதபுரத்தில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைஊசி பழக்கம்

Published On 2021-07-16 15:16 GMT   |   Update On 2021-07-16 15:16 GMT
ராமநாதபுரத்தில் சமீபகாலமாக போதைஊசி பழக்கம் அதிகரித்து வருகிறது. ஒதுக்குப்புறமான பகுதிகளில் ஒன்று சேரும் இளைஞர்கள் போதை ஊசியின் மயக்கத்தில் இருந்து வருகின்றனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மது, சிகரெட் போன்றவற்றை தொடர்ந்து இளைஞர்கள் போதை வஸ்துகளை பயன்படுத்தி வரத்தொடங்கி உள்ளனர். ராமநாதபுரம் நகரில் ஒதுக்குப்புறமான இடங்களில் காட்டு கருவேல மரங்கள் வளர்ந்துள்ள பகுதிகளில் ஏராளமான போதை ஊசிகள் கிடக்கின்றன. இந்த ஊசிகள் போதை தரும் மருந்துகள் மற்றும் மாத்தி ரைகளை ஏற்ற பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது. இன்னும் சிலர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அதில் போதை ஏற்றி வருகின்றனர்.

தற்போது ராமநாதபுரத்தில் இளைஞர்கள் பலர் போதை மாத்திரைகளையும், அது கிடைக்காத இன்னும் சிலர் தூக்க மாத்திரைகளையும் பொடியாக்கி அதனை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் கை நரம்புகளில் ஏற்றி அரை மயக்கத்தில் போதையாக இருந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வளர்ந்துள்ள காட்டுகருவேல மரங்கள்தான் இந்த போதை ஊசி நபர்களின் சொர்க்க பூமியாக திகழ்கிறது. இந்த மரங்களின் இடையில் நடமாட்டம் தெரியாததால் போதை ஊசி மற்றும் மருந்துகளுடன் செல்லும் நபர்கள் அங்கு தங்கள் கை நரம்புகளில் போதை ஊசிகளை ஏற்றிக்கொண்டு அரை மயக்கத்தில் பகல் முழுவதும் கிடக்கின்றனர்.இதுபோன்ற நபர்களுக்கு மோட்டார் சைக்கிள்களில் வரும் மர்ம நபர்கள் சிலர் போதை மாத்திரைகளையும், ஊசிகளையும் இருக்கும் இடத்திற்கே வந்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

மனஅமைதிக்காகவும், தூக்கமின்மைக்காகவும் விற்பனை செய்யப்படும் தூக்க மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி வருவது உடல்நலத்திற்கு தீங்கானது. இதுபோன்ற மாத்திரைகளை டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது என்ற நிலை உள்ள நிலையில் எவ்வாறு இவற்றை வாங்கி பயன்படுத்துகின்றனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை விற்பனை செய்வதை விட போதை ஊசி மருந்துகள் மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்வதில் அதிக லாபம் கிடைப்பதால் இதில் பலர் ஈடுபட்டு வருவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி போதை ஊசி மருந்து விற்பனை செய்பவர்களையும், இதனை பயன்படுத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News