உளுந்தூர்பேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அரசனூர் கிராமத்தில் கிருஷ்ணசாமி (பெருமாள்) கோவில் உள்ளது. நேற்று காலை வழக்கம்போல் பூஜை முடிந்து மதியம் கோவிலை பூட்டி விட்டு சென்றனர்.
இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளைபோய் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் எடைக்கல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டுனர். மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.