தமிழகத்தில் 50 லட்சம் பேரின் ஆதார் தகவல்கள் திருட்டு
சென்னை:
தமிழகம் முழுவதும் 2 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகள் உள்ளன. இந்த ரேஷன் அட்டைதாரர்களில் 50 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் மற்றும் செல்போன் எண்கள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொது வினியோக திட்ட இணைய தளத்தில் இருந்து ஹேக்கர்கள் மூலம் இந்த தகவல்கள் கசிந்துள்ளதாக டெக்னிசாம் என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்....மன்னிப்பு வழங்க கோரி மத்திய அரசுக்கு ரூ.17 கோடி அனுப்பிய நிரவ் மோடி சகோதரி
கடந்த மாதம் 28-ந்தேதி இந்த ஆபத்தான ஹேக்கிங் நடந்து இருப்பதாகவும், அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த ஹேக்கிங் மூலம் மொத்தம் 49 லட்சத்து 19 ஆயிரத்து 668 பேரின் ஆதார் விவரங்களும், செல்போன் எண்களும் இணையதளத்தில் வெளியாகி உள்ளன.
தனிநபரை அடையாளம் காணக்கூடிய தகவல்கள் மற்றும் ஆதார் எண், பயனாளிகளின் விவரங்கள், அவர்கள் உறவினர்களின் விவரங்கள் என அனைத்து தகவல்களும் தரவு தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக டெக்னிசாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தில் தரவுகள் ஹேக் செய்யப்பட்டதன் மூலம் தனிப்பட்ட நபர்களின் தகவல்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.