செய்திகள்
கோப்புபடம்

பெண்கள் குறித்து ஆபாச பதிவு - சேலத்தில் யூ டியூப் சேனல் நடத்திய வாலிபர் கைது

Published On 2021-06-25 09:56 GMT   |   Update On 2021-06-25 09:56 GMT
சேலம் அருகே பெண்கள் குறித்து ஆபாச பதிவு செய்த யூ டியூப் சேனல் நடத்திய வாலிபரை கைது செய்த போலீசார் 75-க்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கி உள்ளனர்.

சேலம்:

சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 27). இவர் ‘மிஸ்டர் நம்பர் 1 டுபாக்கூர்’ என்ற பெயரில் யூ டியூப் சேனல் நடத்தி வந்தார். இவரது நண்பர் அரிசி பாளையத்தை சேர்ந்த வசந்தகுமார் (26). இவர் மனைவியுடன் சேர்ந்து பிராங்க் வீடியோ நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் வசந்தகுமாரின் மனைவியை பற்றி சக்திவேல் தவறாக நண்பர்களிடம் கூறி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதனை அறிந்த சக்திவேல், உனது மனைவி மூலமாக என் மீது புகார் கொடுக்கிறாயா? என கேட்டு வசந்தகுமாரை தாக்கினார். இது குறித்த புகாரின் பேரில் சக்திவேலை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சக்திவேல் நடத்தி வந்த மிஸ்டர் நம்பர் 1 டூபாக்கூர் சேனலில் பெண்களிடம் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டது தெரிய வந்தது. மேலும் அவரை 2.2 லட்சம் பேர் பின் தொடர்ந்ததும் இதன் மூலம் ரூ.4 லட்சம் வரை சம்பாதித்ததும் தெரிய வந்தது.

ஏற்கனவே தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு மூலம் சென்னையில் பெண்களிடம் ஆபாசமாக பேசியதால் கைது செய்யப்பட்ட மதன் போல தன் மீதும் புகார் வந்து விடுமோ என்ற அச்சத்தில் சக்திவேல் தனது சேனலில் பெண்கள் தொடர்பான 75 -க்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கி உள்ளார். இதையடுத்து சக்திவேல் நடத்தி வந்த யூ டியூப் சேனல் மூலம் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் சேலம் மாநகர போலீசில் புகார் கொடுக்கலாம் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர். இதனால் அவர் மீது மேலும் பல புகார்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News