செய்திகள்
நெல்லை அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்த தம்பதி
நெல்லை அருகே குடும்ப தகராறு காரணமாக தம்பதி விஷம் குடித்தனர். இதில் பெண் பலியானார். கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள வானியகுளத்தை சேர்ந்தவர் சுடலைமணி (வயது35), விவசாயி. இவரது மனைவி தெய்வக்கனி (31).
இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மனமுடைந்த தெய்வக்கனி விஷம் குடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சுடலைமணி அந்த விஷபாட்டிலை பறித்து தானும் குடித்தார்.
இதில் 2 பேரும் மயங்கி கீழே விழுந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தெய்வக்கனி பரிதாபமாக உயிரிழந்தார். சுடலைமணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.