செய்திகள்
திருப்பூர் மார்க்கெட்டுகளுக்கு பொதுமக்கள் வருகை குறைந்தது
திருப்பூரில் மார்க்கெட்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கூட்டம் குறைந்து வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தினசரி மார்க்கெட்,தென்னம் பாளையம் மார்க்கெட்டில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி, மளிகை, மீன் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்தனர். கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் மார்க்கெட்டுகளின் பாதிகடைகள் நஞ்சப்பாபள்ளி மற்றும் எல்.ஆர்.ஜி.கல்லூரிக்கு மாற்றப்பட்டது.
இதனால் தினசரி மற்றும் தென்னம்பாளையம் மார்க்கெட்டுகளுக்கு தற்போது பொதுமக்கள் வருகை குறைந்துள்ளது. வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
இதனிடையே திருப்பூர் பல்லடம் சாலையில் சிலர் சாலையோரம் தரைக்கடைகள் அமைத்து காய்கறி வியாபாரம் செய்தனர். அந்த கடை வியாபாரிகளுக்கு போலீசார் அபராதம் விதித்ததுடன் கடைகளை அப்புறப்படுத்தினர்.
வியாபாரம் இல்லாததால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அழுகி வருகின்றன. இதனால் தக்காளி பழங்களை வியாபாரிகள் குப்பை தொட்டியில் வீசும் அவலம் ஏற்பட்டுள்ளது.