செய்திகள்
அவிநாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பேருந்து
அவிநாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பேருந்து பயன்பாட்டுக்கு வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அவிநாசி:
அவிநாசியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து பல்வேறு சமூக அமைப்பினர் ஒன்றிணைந்து ஏற்படுத்தியுள்ள கோவிட் இணைந்த கரங்கள் அமைப்பு சார்பில் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் பேருந்து வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் பேருந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இது குறித்து கோவிட் இணைந்த கரங்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-
மிக குறைந்த ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட அவிநாசி அரசு மருத்துவமனைக்கு தற்காலிக தீர்வாக கோவிட் இணைந்த கரங்கள் அமைப்பினர் கோரிக்கையை ஏற்று ஆக்சிஜன் பேருந்து ஏற்பாடு செய்த மாவட்ட நிர்வாகத்துக்கும், முயற்சி மேற்கொண்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி. இப்பேருந்தில் ஆக்சிஜன் தேவை என அரசு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு படுக்கை கிடைக்கும் வரை இப்பேருந்தில் தங்க வைக்கப்படுவர். ஒரே நேரத்தில் 10 பேருக்கு ஆக்சிஜன் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலிண்டர்கள் மூலம் அல்லாமல் கான்சென்டடேட்டர் முறையில் காற்றிலிருந்து சுத்தமான முறையில் ஆக்சிஜனை பிரித்து பயன்படுத்துவதால், 24 மணி நேரமும் இதனை பயன்படுத்த முடியும். ஆக்சிஜன் பேருந்து அவிநாசி அரசு மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றார்.