செய்திகள்
திருப்பூர் வாலிபரிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை
திருப்பூர் வாலிபரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தியதுடன் செல்போனை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்:
மதுரை காஜிமார் தெருவை சேர்ந்தவர் முகம்மது இக்பால். இவர் ஓராண்டுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் தீவிரவாத கருத்துக்களை ஆதரித்து சில கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் மதகலவரத்தை தூண்டும் வகையிலும், ஐ.எஸ்., ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பு உள்ளிட்ட ஓரிரு இஸ்லாமிய அமைப்புகளுக்கு ஆதரவாகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கிலும் சில கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மதுரை திடீர் நகர் போலீசார் கடந்த டிசம்பர் 2-ந்தேதி வழக்குப்பதிவு செய்து இக்பாலை கைது செய்தனர். இந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் நிலையில், கடந்த ஏப்ரல் 15-ந்தேதி வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து இக்பாலிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவல்கள் அடிப்படையில் திருப்பூரை சேர்ந்த வாலிபர் நசீருதீன் என்பவரிடம் என்.ஐ.ஏ.அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கொச்சியில் இருந்து திருப்பூர் வந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் என்.ஐ.ஏ.,இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் விசாரித்தனர்.
நசீருதீன் இக்பாலுடன் அரபி கல்லூரியில் படித்தவர் என்பதுடன், இக்பாலின் வாட்ஸ்-அப் குழுவில் அங்கம் வகித்துள்ளார். அதனடிப்படையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது நசீருதீன் வீட்டில் இருந்து செல்போன் ஒன்றை பறிமுதல் செய்தனர்.