செய்திகள்
கோப்புப்படம்

முழு ஊரடங்கு காலத்தில் பரமபதம் விளையாடி பொழுதை கழிக்கும் மக்கள்

Published On 2021-05-12 20:57 GMT   |   Update On 2021-05-12 20:57 GMT
முழு ஊரடங்கு காலத்தில் தாயம், பரமபதம் போன்ற பழைய விளையாட்டுகளை விளையாடி மக்கள் பொழுதைக் கழித்து வருகிறார்கள்.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மளிகை, காய்கறி, பலசரக்கு கடைகள், டீக்கடைகள் பகல் 12 மணி வரை செயல்படுகிறது. அதன் பிறகு அனைத்து கடைகளும் மூடப்படுகிறது. வங்கிகள் மதியம் 2 மணி வரை செயல்படுகிறது.

இதன் காரணமாக மதியம் வரை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் யாரும் செல்ல வேண்டாம் என்று மாநகர போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

பிரதான சாலைகளில் போக்குவரத்து அதிகரித்த போதும், மாநகர வீதிகளில் உள்ள குறுக்கு சாலைகளில் போக்கு வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் மாநகரில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள ரோடுகளில் இளைஞர்கள் சிறுவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். பகல் நேரத்தில் பல பகுதிகளில் சாலையில் கிரிக்கெட் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடுகிறார்கள்.

பெரும்பாலான வீடுகளில் பெண்கள் பரமபதம், தாயம், பல்லாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். இதன் காரணமாக திருப்பூர் பகுதியில் தாயம், பரமபதம் விற்பனை செய்பவர்கள் அதிக அளவில் வீதியில் உலாவி வருகிறார்கள்.

கடந்த முறை முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீதியில் நடமாடாமல் பழைய விளையாட்டுகளில் மூழ்கி இருந்தனர். டி.வி., செல்போன் போன்றவை பொழுதை கழிக்க இருந்தாலும் உறவினர்கள் நண்பர்களுடன் பரமபதம், தாயம் ஆகிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்வதை மக்கள் விரும்பியுள்ளனர்.
Tags:    

Similar News