செய்திகள்
வ.உ.சி. மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

தூத்துக்குடியில் வியாபாரிகள் திடீர் கடையடைப்பு- தர்ணா போராட்டம் - வ.உ.சி. மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு

Published On 2021-04-10 14:40 GMT   |   Update On 2021-04-10 14:40 GMT
தூத்துக்குடியில் வ.உ.சி. மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் திடீர் கடையடைப்பு மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட்டில் 602 கடைகள் உள்ளன. இந்த கடைகளை இடித்துவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சுமார் ரூ.28 கோடியே 71 லட்சம் மதிப்பில் புதிய வணிக வளாகம் கட்ட மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டுள்ளது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வியாபாரிகள் வழக்கு தொடர்ந்தனர்.

இதில் 10-ந் தேதிக்குள் கடைகளை காலி செய்து மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதனையடுத்து மாநகராட்சி நிர்வாகம் கடைகளை காலி செய்யக்கோரி நோட்டீஸ் ஒட்டியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வ.உ.சி. மார்க்கெட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எந்தவித கட்டிடங்களையும் கட்டக்கூடாது என வலியுறுத்தியும் வியாபாரிகள் நேற்று கடைகளை அடைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு வ.உ.சி மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க செயல் தலைவர் சந்தனராஜ் தலைமை தாங்கினார். தலைவர் அசோகன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வணிகர் பேரவை மாநில துணைச் செயலாளர் பழரசம் விநாயகமூர்த்தி வாழ்த்தி பேசினார். துணைத்தலைவர்கள் நயினார், பட்டுராஜா, சண்முகராஜ், மாரியப்பன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் அன்புராஜ், துணைச் செயலாளர்கள் கஷ்மீர், சண்முகராஜ் மற்றும் நிர்வாகிகள் வேலுச்சாமி, செல்வகுமார், வெள்ளைச்சாமி, முத்துபாலகிருஷ்ணன், உத்திரபாண்டி, மரகதம் உள்பட வியாபாரிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

100 ஆண்டுகள் பழமைவாய்ந்த வ.உ.சி. மார்க்கெட்டில் சுமார் 602 கடைகள் உள்ளன. நாங்கள் நான்கு தலைமுறையாக வியாபாரம் செய்து வரும் நிலையில், எங்களை காலி செய்யும்படி கூறுவதால் ஏறத்தாழ 50 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கைவிட்டு பழைய நிலையே தொடர வேண்டும். புதுப்பிக்கும் பட்சத்தில் ஏற்கனவே உள்ளவர்களுக்கு கடைகளை வழங்குவோம் என உறுதி அளிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் எங்களது வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News