சாத்தான்குளத்தில் ஜாமீனில் வெளியே வந்தவர் வெட்டிக்கொலை
சாத்தான்குளம்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கீழபனைகுளத்தை சேர்ந்தவர் யோவான் (வயது 35). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை அரிவாளால் வெட்டினார்.
இது தொடர்பான புகாரின்பேரில் செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து யோவானை கைது செய்தனர். தற்போது ஜாமீனில் வெளிவந்த அவர் கீழபனைகுளத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை யோவான் வெளியே சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அங்கு தேடி சென்றனர். அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் யோவான் தலை, முகங்களில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து தகவலறிந்த சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு காட்வின் ஜெபதாஸ், இன்ஸ்பெக்டர் சேவியர் பெர்னாந்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் காலைக்கடனை கழிக்க சென்ற யோவானை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு சென்றது தெரியவந்தது.
பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் யோவானை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக அவரை கொலை செய்தனர் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.