செய்திகள்
கொலை

ஆண்டிபட்டி அருகே கூலித்தொழிலாளி அடித்து கொலை

Published On 2021-02-24 06:17 GMT   |   Update On 2021-02-24 06:17 GMT
ஆண்டிபட்டி அருகே கூலித்தொழிலாளி கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி அருகில் உள்ள பாலகோம்பையை சேர்ந்தவர் வெள்ளைத்துரை(40). இவர் தேங்காய் உறிக்கும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி வள்ளி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நேற்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடிப்பார்த்துவிட்டு அவரது குடும்பத்தினர் தூங்கச்சென்றுவிட்டனர். இன்று அதிகாலை பாலகோம்பை-ராயவேலூர் சாலையில் சுடுகாடு அருகே வெள்ளைத்துரை தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதைபார்த்த அப்பகுதி பொதுமக்கள் ராஜதானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி தங்ககிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் உஷா மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டும், தடயவியல் நிபுணர்கள் வந்தும், விசாரணை நடத்தினர். மேலும் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான்பாட்சா, தனராஜா ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசாரும் விசாரணை நடத்தினர்.

அவரது தலையில் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது பெண் பிரச்சினையில் கொலை நடந்ததா என்று பல்வேறு கோணங்களில் ராஜதானி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News