செய்திகள்
கைது

வரதட்சணை கொடுமை புகார்- அமெரிக்க என்ஜினீயர் கைது

Published On 2021-01-18 09:02 GMT   |   Update On 2021-01-18 09:02 GMT
வரதட்சணை கொடுமை புகாரில் சென்னை திரும்பிய அமெரிக்க என்ஜினீயரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

சென்னை ராயப்பேட்டை, துரைசாமி காலனியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவருக்கும் விழுப்புரம் முத்தையா நகரை சேர்ந்த என்ஜினீயர் வசந்தனுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 

திருமண தகவல் மையம் மூலமாக வரன் பார்த்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு திருமண தம்பதியர் அமெரிக்காவில் குடியேறினர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் உள்ள கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. 

அதன் பிறகு ஜெயஸ்ரீ தனியாக சென்னை திரும்பினார். பின்னர் அண்ணாசாலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வசந்தன் பெயரில் வரதட்சணை புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி விசாரணை நடத்தி வந்தார்.

அமெரிக்காவில் இருந்த வசந்தனை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து கடந்த 9-ந் தேதி அவரது பாஸ்போர்ட்டை முடக்கக் கோரி குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் நேற்று அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய வசந்தனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News