செய்திகள்
மீன் தொழிலாளர் சங்கத்தினர் 3 நாட்கள் போராட்டம் நடத்த முடிவு - கலெக்டர் அலுவலகத்தில் மனு
கோரிக்கைகளை வலியுறுத்தி மீன் தொழிலாளர் சங்கத்தினர் 3 நாட்கள் போராட்டம் நடத்த முடிவு செய்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் அந்தோணி தலைமையில், மாவட்ட தலைவர் அலெக்சாண்டர், பொருளாளர் டிக்கார்தூஸ், நிர்வாகிகள் தனிஸ், ஜேம்ஸ், பிராங்கிளின் உள்ளிட்டோர் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு பட்டியலிடப்பட்ட மீன்பிடி வள்ளங்களுக்கு மானிய விலை மண்எண்ணெய் காலதாமதமின்றி வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தோம்.
இதைதொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 543 நாட்டுப்படகுகளுக்கும் மண்எண்ணை மானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் உறுதியளித்து இருந்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்ட நேரத்தில் மண்எண்ணெய் வழங்கப்படாததால் மீனவர்கள் மிகுந்த கஷ்டத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
எனவே, வரையறுக்கப்பட்ட வள்ளங்கள் மற்றும் நாட்டுப்படகுகளுக்கு மண்எண்ணெய் வழங்கக்கோரி வருகிற 27, 29, 30 ஆகிய 3 தேதிகளில் நாகர்கோவில் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு தொடர் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.