செய்திகள் (Tamil News)
கூடங்குளம் அணு உலை

கூடங்குளம் 2-வது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறால் மின் உற்பத்தி நிறுத்தம்

Published On 2020-12-29 12:27 GMT   |   Update On 2020-12-29 12:27 GMT
கூடங்குளம் 2-வது அணு உலையில் இன்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்து மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதில் முதல் அணு உலை கட்டுமானப்பணி முடிவடைந்து கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கியது. 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதியன்று வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கி நடந்து வருகிறது.

தொடர்ந்து 2-வது அணு உலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதையடுத்து 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி முதல் 2-வது அணு உலையில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கியது.

இந்த இரு அணு உலைகளில் இருந்தும் உற்பத்தியாகும் மின்சாரம் நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2-வது அணு உலையில் இன்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்து மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதன் காரணமாக அங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் 1, 000 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூடங்குளம் அணுமின்நிலைய அதிகாரிகளிடம் கேட்ட போது, 2-வது அணுஉலையில் திடீரென்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அதனை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் 2 நாளில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் அங்கிருந்து மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று கூறினர்.

ஏற்கனவே முதலாவது அணு உலையில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த 14-ந் தேதி மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. விஞ்ஞானிகள் பழுதை சரி செய்ததையடுத்து மீண்டும் மின்உற்பத்தி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News