செய்திகள்
திருச்சியில் பா.ஜ.க.வினர் திடீர் சாலை மறியல்
திருச்சியில் பா.ஜ.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி:
திருச்சி தாராநல்லூர் பகுதியில் ஒரு வீட்டுக்கு குடிநீர் இணைப்பிற்காக நேற்று பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து அங்கு வந்த பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணியினர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அங்கு வீடு கட்டப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது விடுமுறை நாளான இன்று அதாவது விதிமுறையை மீறி அந்த வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், இதனை கண்டித்து திருச்சி-தஞ்சை சாலையில் மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் போலீசார் அங்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து புறப்பட்டு அரியமங்கலம் கோட்ட அலுவலகத்துக்கு திரண்டு சென்று இது பற்றி கேட்டனர். இதையடுத்து அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கோர்ட்டில் வழக்கு இருக்கும் நிலையில், பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.