செய்திகள்
நகை கொள்ளை

நிலக்கோட்டை அருகே போலீஸ்காரர் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை

Published On 2020-12-15 01:24 GMT   |   Update On 2020-12-15 01:24 GMT
நிலக்கோட்டை அருகே போலீஸ்காரர் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை போனது.
நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மட்டப்பாறையை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் முத்து ரமேஷ் (வயது 30). இவர் அம்மையநாயக்கனூரில் நெடுஞ்சாலை ரோந்து போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி சண்முக பிரியா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். முத்துரமேசின் அக்காள், தாயார் திண்டுக்கல்லில் வசிக்கின்றனர்.

இந்த நிலையில் தாயாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த முத்துரமேஷ் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல்லுக்கு வந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் அவருடைய வீட்டின் கதவில் இருந்த பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

நேற்று காலை முத்து ரமேசின் வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவருக்கு தகவல் கொடுத்தனர். உடனே வீட்டுக்கு திரும்பி வந்த அவர், பீரோவை பார்த்த போது அதில் இருந்த 70 பவுன் நகைகள் கொள்ளை போனதையறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து விளாம்பட்டி போலீசில் முத்து ரமேஷ் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே மாவட்ட கைரேகை தொழில்நுட்ப போலீஸ் துணை சூப்பிரண்டு ராமஅப்துல்லா மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர்.

பின்னர் மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து மோப்பம் பிடித்துவிட்டு சாலையில் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மேலும் இந்த சம்பவம் குறித்து விளாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ்காரர் வீட்டிலேயே மர்ம நபர்கள் கைவரிசை காட்டிச்சென்ற இந்த துணிகர சம்பவம் அப்பகுதி மக்களை பீதியடைய செய்துள்ளது.
Tags:    

Similar News