செய்திகள்
தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை: திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா விளக்கம்
தற்கொலை முயற்சி என்ற செய்தி தவறானது என திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா விளக்கம் அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான பூங்கோதை ஆலடி அருணாவுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் விலக்கில் உள்ள அவரது வீட்டில் சுயநினைவு இல்லாத நிலையில் இருந்த அவரை நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து இன்று அவர் உடல் பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்வதாகவும், அதனால் தன்னை டிஸ்சார்ஜ் செய்யுமாறும் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கேட்டார். இதையடுத்து அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதற்கிடையே பூங்கோதை ஆலடி அருணா தற்கொலைக்கு முயன்றதாக செய்தி வெளியானது. இந்நிலையில் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்தி தவறானது. திரித்து கூறப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் ரத்த சர்க்கரை அளவு, ரத்தத்தின் உறையும் தன்மை குறைவு ஆகியவற்றால் மயக்க நிலை ஏற்பட்டுள்ளது. மயக்க நிலைக்கான காரணத்தை கண்டறிய சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.