செய்திகள்
எட்டயபுரம் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதை படத்தில் காணலாம்.

எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-03 14:19 GMT   |   Update On 2020-11-03 14:19 GMT
விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கக்கோரி, தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் நேற்று எட்டயபுரம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எட்டயபுரம்:

எட்டயபுரம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு விவசாய சங்கத்தின் எட்டயபுரம் தாலுகா குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நல்லையா தலைமையில், தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

நடப்பாண்டில் பருவமழையை நம்பி மக்காச்சோளம், உளுந்து போன்றவற்றை பயிரிட்டு, உரமிட்டு விதைத்த பின் மழை காலதாமதமாக பெய்ததால், விதைகள் முளைக்காமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழை பெய்யாததால் மீண்டும் புதிதாக விதை வாங்கி உரமிட்டு விதைத்தபின் மழை காலதாமதமாக பெய்ததால் 2-வது தடவையாகவும் விதைகள் முளைக்காமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விதைகளை விதைத்து நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பின்னர் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நஷ்டஈடு கோரி தனித்தனியாக எட்டயபுரம் தாசில்தார் அய்யப்பனிடம் மனுக்கொடுத்தனர். இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுப்பதாக, தாசில்தார் உறுதியளித்தார்.
Tags:    

Similar News