செய்திகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் 1,300 மதுபாட்டில்கள் பறிமுதல் - 124 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 124 பேரை கைது செய்த போலீசார் 1,300 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் திண்டுக்கல், பழனி, வேடசந்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள் போலீசாரிடம் சிக்கினர். அதேபோல் இன்று (வெள்ளிக்கிழமை) மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால், சட்டவிரோதமாக விற்பதற்கு மொத்தமாக மதுபானம் வாங்கி சென்றவர்களும் பிடிபட்டனர். அந்த வகையில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 124 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1,300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.