செய்திகள்
கூத்தாநல்லூரில் மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு அரிவாள் வெட்டு
கூத்தாநல்லூரில் மோட்டார்சைக்கிளில் சென்றவரை அரிவாளால் வெட்டிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கூத்தாநல்லூர்:
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மேலத்தெருவை சேர்ந்தவர் முகமது ரபியுதீன் (வயது 57). இவர் கூத்தாநல்லூர் பள்ளிவாசல் ஒன்றில் நிர்வாக குழு பொறுப்பில் உள்ளார். இந்தநிலையில் நேற்று மதியம் கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது புதிய பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் முகமது ரபியுதீனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசில் முகமது ரபியுதீன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.