செய்திகள்
கோப்புப்படம்

மாவட்டத்தில் தலைமை ஆசிரியை உள்பட 117 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-10-19 18:25 GMT   |   Update On 2020-10-19 18:25 GMT
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,095 ஆக உயர்ந்து உள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 7,973 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,978 ஆக அதிகரித்தது.

இதற்கிடையே நேற்று சேலம் என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர், வாழவந்தி அங்கன்வாடி உதவியாளர், பாலநாயக்கன்பாளையம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை, சேந்தமங்கலம் போலீஸ்காரர், மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர், பொத்தனூர் அரசு பள்ளி ஆசிரியை, ராமாபுரம் டாஸ்மாக் விற்பனையாளர் உள்பட 117 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. வழக்கம்போல் நேற்றும் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர் பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,095 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 185 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 7,097 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 90 பேர் பலியான நிலையில், மீதமுள்ள 908 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News