செய்திகள்
கோப்புபடம்

சேலம் உடையாப்பட்டியில் மயான நிலம் ஆக்கிரமிப்பு - பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2020-10-18 09:56 GMT   |   Update On 2020-10-18 09:56 GMT
சேலம் உடையாப்பட்டியில் மயானத்திற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம்:

சேலம் உடையாப்பட்டி அடுத்துள்ள தாதம்பட்டி காந்திநகரில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இதன் அருகில் உள்ள மயானத்துக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் தரப்பில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், மயானத்திற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிலத்தை மீட்டு தரக்கோரி நேற்று காலை காந்திநகர் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சேலம்-சென்னை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மாநகராட்சி அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்தனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், மயானத்திற்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News