செய்திகள்
மரணம்

திருப்பூர் அருகே தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து 1 வயது குழந்தை பலி

Published On 2020-09-16 05:38 GMT   |   Update On 2020-09-16 05:38 GMT
திருப்பூர் அருகே தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து 1 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

பீகாரை சேர்ந்தவர் ராம்லால். இவரது மனைவி சாந்தினி தேவி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்களது கடைசி மகன் தீபக்(வயது1). ராம்லால் தனது குடும்பத்தினருடன் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள பாறைப்பாளையம் என்ற பகுதியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராம்லால் இறந்து விட்டார். இதையடுத்து சாந்தினி தேவி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று காலை வழக்கம் போல் சாந்தினி தேவி வேலைக்கு சென்று விட்டார். குழந்தை தீபக்கை அவரது அக்காள் கவனித்து வந்தார். குழந்தை அங்கும் இங்கும் சுற்றி திரிந்து விளையாடி கொண்டிருந்தது.

அப்போது வீட்டின் வாசலில் தண்ணீர் வைத்திருந்த பிளாஸ்டிக் வாளியை குழந்தை எட்டி பார்த்தது. அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை தீபக் தவறி வாளிக்குள் விழுந்து விட்டான்.

இதை வீட்டில் இருந்த யாருமே கவனிக்கமால் தங்களது வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில் சாந்தினி தேவி வேலைக்கு சென்று மாலையில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பு உள்ள தண்ணீர் வாளிக்குள் குழந்தை மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் உடனடியாக குழந்தையை தூக்கி கொண்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு சாந்தினி தேவி கதறி அழுதார்.

இதுபற்றி திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News