செய்திகள்
குற்றவாளிகளுக்கு இடம் அளிக்காமல் இருந்தால் மட்டுமே அரசியலை தூய்மைப்படுத்த முடியும்: சென்னை உயர்நீதிமன்றம்
மகாராஷ்டிரா மாநிலம் போன்று புதுச்சேரியில் ரவுடிகளை ஒழிக்க ஏன் தனிச்சட்டம் கொண்டு வர முடியாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த ஜனா என்பவர் குண்டர் சண்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். குண்டர் சட்டத்தை எதிர்த்து அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது சென்னை உயர்நீதிமன்றம் கூறியதாவது:-
குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு கட்சியில் இடமளிக்க, தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. குற்றவாளிகள் அரசியலுக்குள் நுழைந்து எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சராவது மக்களுக்கு தவறான தகவலை சேர்க்கும். குற்றவாளிகளுக்கு இடம் அளிக்காமல் இருந்தால் மட்டுமே அரசியலை தூய்மைப்படுத்த முடியும்.
குற்றப் பின்னணி உள்ளவர்கள் அரசியலுக்குள் நுழைந்து கொள்கைகளை உருவாக்குபவர்களாக மாறுவது துரதிருஷ்டமானது.
இவ்வாறு உயர்நீதிமன்றம் தனது கருத்தை வெளிப்படுத்தியது.
புதுச்சேரியில் ரவுடி கும்பலை ஒழிக்க மகாராஷ்டிரா போல் ஏன் தனி சட்டம் கொண்டு வரக்கூடாது. புதுச்சேரியில் குற்ற பின்னணியுடன் அரசியல் கட்சியில் உள்ளவர்கள் எத்தனை பேர்?. புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்? என்பது குறித்து பதில் அளிக்க புதுச்சேரி மாநிலத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.