செய்திகள்
ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர்- தளவாய் சுந்தரம் வழங்கினார்
ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கபசுர குடிநீர் வழங்கினார்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் 2 மேற்பார்வையாளர்கள், 5 தொழிலாளர்கள் என 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். அதே சமயத்தில் அங்கு பணிபுரியம் அனைவரையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்தனர்.
மேலும், சோதனைச்சாவடியில் உள்ள சளிமாதிரி எடுக்கும் மையத்துக்கு சென்று தொழிலாளர்களை பரிசோதனை செய்யுமாறு கூறினர். இதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து நூற்பாலையில் வந்து சுகாதாரத்துறையினர் தொழிலாளர்களிடம் சளிமாதிரி எடுக்கும் பணி நடக்கிறது. இந்த நிலையில் நூற்பாலைக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் வந்தார். அங்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான மருந்துகளை உட்கொள்ளுமாறு தொழிலாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
பின்னர் தொழிலாளர்களுக்கு தளவாய்சுந்தரம் கபசுர குடிநீரை வழங்கினார். மேலும், நூற்பாலையில் அவர் ஏற்பாட்டில் வந்த வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பதையும் பார்வையிட்டார். அப்போது, ஆலை மேலாளர் வஜ்ரவேல், மேலாண்மை இயக்குனர் கர்ணன், நிர்வாக அலுவலர் முருகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் அன்வர் அலி, அ.தி.மு.க. நிர்வாகிகள் மாடசாமி, செல்வன், மாசாணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.