செய்திகள்
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 976 உயர்ந்து 42,592 ரூபாய்க்கு விற்பனை
கொரோனாவால் பொருளாதாரம் வீழ்ந்துள்ள நிலையில் தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்து இன்று சவரன் 42,592 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகமே முடங்கிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஒவ்வொரு நாடுகளும் தங்கத்தை வாங்குவதை குறைத்துள்ளன. அதேபோல் வாங்கும் நபர்களின் சக்தியும் குறைந்துள்ளது.
ஆனால் முதலீட்டார்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வததுதான் தற்போதைய காலக்கட்டத்தில் சிறந்தது என்று நினைக்கிறார்கள். இதனால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இன்று சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 976 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 42,592 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
இன்று ஒரு கிராமிற்கு 122 ரூபாய் அதிகரித்து 5,324 ரூபாய்க்கு விற்பனை ஆகியது. கடந்த ஐந்து வாரங்களில் சவரனுக்கு 5,528 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.