செய்திகள்
கோப்புபடம்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தை அரசியல் கட்சியினர் முற்றுகை

Published On 2020-08-05 10:05 GMT   |   Update On 2020-08-05 10:05 GMT
பணியின் போது எந்திரத்தில் சிக்கி கையிழந்த பெண்ணுக்கு கூடுதல் நிவாரணம் கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தை அரசியல் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
நெல்லை:

நெல்லை மாநகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர் பாக்கியலட்சுமி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் நுண்உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் சிக்கி இவரது ஒரு கை துண்டானது. இவருக்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பாக்கியலட்சுமிக்கு அரசு நிவாரணமாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால் ரூ.1 லட்சம் போதாது, ரூ.25 லட்சமாக நிவாரண உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அரசியல் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதில் திராவிட தமிழர் கட்சி இளமாறன், ஆதித்தமிழர் ராமமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் முத்துவளவன், ஆதித்தமிழர் பேரவை கலைக்கண்ணன், தமிழ்ப்புலிகள் தமிழரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நெல்லைக்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போலீசார் அவர்களை கலெக்டர் அலுவலக அதிகாரிகளை சந்திக்க அழைத்துச்சென்றனர்.
Tags:    

Similar News