செய்திகள்
கைது

ராணுவ வீரரிடம் நகை -பணம் பறிப்பு - வாலிபர் கைது

Published On 2020-06-03 10:39 GMT   |   Update On 2020-06-03 10:39 GMT
கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ராணுவ வீரரிடம் நகை-பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
உப்புக்கோட்டை:

தேனி அருகே உள்ள சடையால்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 25). இவர் இந்திய ராணுவ வீரராக லடாக் பகுதியில் பணியாற்றி வருகிறார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இவர் தாடிச்சேரியில் உள்ள தனது நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வீரபாண்டி-தாடிச்சேரி இடையே உள்ள ஒரு மலைக்கரட்டு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது 3 வாலிபர்கள் அவருடைய மோட்டார் சைக்கிளை வழிமறித்துள்ளனர்.

அப்போது மோட்டார் சைக்கிளை நிறுத்திய அருண்குமாரின் கழுத்தில் திடீரென ஒருவர் கத்தியை வைத்து மிரட்டியுள்ளார். பின்னர் அவரை அருகில் இருந்த கரட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் சங்கிலி, 2 செல்போன் மற்றும் ரூ.4 ஆயிரத்து 500 ஆகியவற்றை அந்த வாலிபர்கள் பறித்துக்கொண்டு, அவருடைய மோட்டார் சைக்கிள் சாவியை புதருக்குள் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் அருண்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக வீரபாண்டியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (19) என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News