செய்திகள்
கொலை

ஆபாச படம் பார்த்த சென்னை வாலிபரை கொன்று மனைவி நாடகம்

Published On 2020-05-21 10:04 GMT   |   Update On 2020-05-21 10:04 GMT
நித்திரவிளை அருகே நள்ளிரவில் ஆபாச படம் பார்த்த சென்னையை சேர்ந்த வாலிபரை கொன்று தற்கொலை நாடகம் ஆடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:

நித்திரவிளை அருகே தூத்தூர் புனித தோமஸ் நகரைச் சேர்ந்தவர் ஜோபாய். இவரது மகள் ஜாப்லின்(30). சென்னையில் உள்ள கல்லூரியில் படித்த போது சென்னை ஆர்.கே.நகரை சேர்ந்த கார்கி(35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

குழந்தைகள் பிறந்த பிறகு கார்கி தம்பதியினர் தூத்தூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். கார்கி சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் கார்கி வீட்டில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். கார்கி தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி ஜாப்லின் போலீசாரிடம் தெரிவித்தார்.

கார்கியின் உடலில் காயங்கள் இருந்ததால் போலீசார் சந்தேகம் அடைந்து ஜாப்லினை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கார்கியை மனைவி ஜாப்லின், அவரது தந்தை ஜோபாய், அண்ணன் ஜஸ்டஸ் ஆகியோர் அடித்து கொலை செய்து விட்டு நாடகமாடியது தெரிய வந்தது.

போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். ஜாப்லின் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

திருமணத்துக்கு பிறகு கார்கி என்னிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். நீண்ட நேரமாக செல்போனில் வேறு பெண்களுடன் பேசி வந்தார். இதை நான் கண்டித்தேன்.

சம்பவத்தன்று இரவு அவர் செல்போனில் ஆபாச படங்களை பார்த்துக் கொண்டிருந்தார். அதை பார்த்த நான் அவரிடம் வாக்குவாதம் செய்தேன். அப்போது அவர் என்னை தாக்கினார். இந்த சம்பவத்தை எனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதேன். உடனே எனது தந்தை ஜோபாய், அண்ணன் ஜஸ்டஸ் ஆகியோர் எனது வீட்டிற்கு வந்தனர். ஆத்திரத்தில் எனது கணவரை சரமாரியாக தாக்கினார்கள். இதில் அவர் இறந்தார். கொலையை மறைப்பதற்காக எனது கணவர் தூக்குப்போட்டு இறந்து விட்டதாக நாடகம் ஆடினேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News