செய்திகள்
குருத்தோலை ஞாயிறு

கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஞாயிறு- ஈஸ்டர் கொண்டாட்டங்கள் ரத்து- வீட்டில் இருந்து ஜெபிக்க அறிவுறுத்தல்

Published On 2020-04-04 10:22 GMT   |   Update On 2020-04-04 10:22 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஞாயிறு மற்றும் ஈஸ்டர் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது. வீட்டில் இருந்து ஜெபிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை:

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு எச்சரித்து வருகிறது. ஊரடங்கு தடை உத்தரவை மீறியும் சிலர் அலட்சியமாக செயல்படுவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஞாயிறு நாளை அனுசரிக்கப்படுகிறது.

ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தக் கொண்டாட்டத்தில், குருத்தோலை பிடித்தபடி கிறிஸ்தவர்கள் பாடல்கள் பாடிக்கொண்டு ஜெபித்தவாறே ஊர்வலமாக செல்வார்கள். பின்னர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

எனவே நாளை (5-ந்தேதி) நடைபெற இருந்த குருத்தோலை ஊர்வலங்கள் மற்றும் பொது வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் வீட்டிலிருந்தே செபிக்க வேண்டும் என்று ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வருகிற வாரத்தை புனித வாரமாக அனுசரிக்கிறார்கள். திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை துக்க தினமாக கடைபிடிக்கபடுகிறது. பெரிய வியாழன், புனித வெள்ளி ஆகிய நாட்களில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

அதனை தொடர்ந்து இயேசு கிறிஸ்து உயிர் தெழுந்த திருநாளை கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை ஞயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகின்றன. இந்த ஆண்டு, ஏப்ரல் 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெற வேண்டிய புனித வியாழன், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பொது வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொலைக்காட்சிகள் மற்றும் இணைய தளங்கள் வழியாக ஒரு சில ஆயர்கள் பிரார்த்தனை நடத்துகின்றனர்.

உலகம் முழுவதும் குருத்தோலை ஞாயிறு மற்றும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசின் உத்தரவை பின்பற்றி வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தென் இந்திய திருச்சவை சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் கூறியதாவது:-

அரசின் உத்தரவையும், மக்கள் நலனை கருதி ஏப்ரல் 14-ந் தேதி வரை அனைத்து வழிபாடுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரை வீட்டில் இருந்தவாறு அனைவரும் ஜெபிக்க வேண்டும்.

குருத்தோலை ஞாயிறு, புனித வார வழிபாடுகள் எதுவும் நடைபெறாது. சென்னை பேராயத்தின் சார்பாக யூடியூப் தொடங்கப்படுகிறது. அதன் வழியாக குருத்தோலை ஞாயிறு முதல் ஈஸ்டர் வரை உள்ள பெரிய வாரத்தின் சிறப்பு செய்தியை யூடியூப் வழியாக கேட்டுக் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News