செய்திகள்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டியில் பங்கு பெற்ற மாணவர்கள்

பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள்

Published On 2020-03-13 18:08 GMT   |   Update On 2020-03-13 18:08 GMT
பள்ளி மாணவ- மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது.
பெரம்பலூர்:

பெரம்பலூரில், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல்துறை, பள்ளிக்கல்வித்துறை, தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் இந்தோ அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது. போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன் தொடங்கி வைத்தார். முன்னதாக தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா முகமது உசேன் வரவேற்றார்.

மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். பாலித்தீன் ஒழிப்பு, புவி வெப்பமடைதல் என்ற தலைப்புகளில் ஓவியம், வினாடி- வினா, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலும் தனித்தனியே இரு பாலருக்கும் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் 365 பேர் பங்கேற்றனர். முதல் பரிசாக ரூ.1,500-ம், 2-வது பரிசாக ரூ.1,000-ம், 3-வது பரிசாக ரூ.750-ம், ஒவ்வொரு போட்டிக்கும் 2 பேருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்படும் என்று தேசியபசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். முடிவில் இந்தோ அறக்கட்டளை மேலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News