திருப்பூர் பகுதிகளில் கஞ்சா விற்ற 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டி ஆத்தூர் காளியம்மன் கோவிலை சேர்ந்த மாயப்பன் என்ற மாயவன் (வயது 43), நாகப்பட்டினம் மாவட்டம் வெளிபாளையம் வடக்கு நல்லியான் தோட்டத்தை சேர்ந்த அன்னகொடி (39), திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டியை சேர்ந்த பெரியாண்ட தேவர் (25) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இவர்கள் 3 பேர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக பல வழக்குகள் உள்ளது. இதன் காரணமாக அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து மாயவன், அன்னகொடி, பெரியாண்ட தேவர் ஆகிய 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு அதற்கான ஆணை அவர்களுக்கு வழங்கப்பட்டது.