செய்திகள்
வருமான வரித்துறை

வேலம்மாள் கல்வி நிறுவனங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

Published On 2020-01-22 06:49 GMT   |   Update On 2020-01-22 06:49 GMT
வேலம்மாள் கல்வி நிறுவனங்களில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை:

வேலம்மாள் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வேலம்மாள் கல்வி குழுமத்துக்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தினர்.

கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் நிர்வாகிகள், அறக்கட்டளையில் உள்ள பொறுப்பாளர்கள் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனை இன்று 2-வது நாளாக நீடிக்கிறது.

சென்னையை அடுத்த சூரப்பட்டு, பொன்னேரி பஞ்செட்டி ஆகிய இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் இன்று தொடர்ந்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

தேனியில் மதுரை மாவட்ட வருமானவரித்துறை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் 10 பேர் சோதனையிட வந்தனர். பகல் 12 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 9 மணி வரை நீடித்தது. ஒரு குழுவினர் மெட்ரிக் பள்ளியிலும் மற்றொரு குழுவினர் சி.பி.எஸ்.இ. பள்ளியிலும் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

பள்ளியில் இருந்த ஆவணங்கள் மற்றும் இருப்பில் இருந்த பணங்கள் அதற்கான ரசீதுகள் ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக வருமானவரித்துறையினர் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News