செய்திகள் (Tamil News)
வீடு புகுந்து கொள்ளை

அருமனை அருகே வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் நகை கொள்ளை

Published On 2020-01-18 08:52 GMT   |   Update On 2020-01-18 08:52 GMT
அருமனை அருகே வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்:

அருமனையை அடுத்த செம்மாங்காலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்மெர்லின் (வயது 43).

இவர் சம்பவத்தன்று இரவு தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் வீட்டின் மேல்மாடி சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தது. இதுகுறித்து அருமனை போலீசில் புகார் செய்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் ஆட்கள் தூங்கிக்கொண்டிருந்த போது சத்தமின்றி பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் மாடிக்கு சென்று அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த செயின், நெக்லஸ், வளையல், மெட்டி ஒரு ஜோடி, மோதிரம், கம்மல் என மொத்தம் 23 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்று இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் உடைக்கப்பட்ட கதவு மற்றும் பீரோ ஆகிய இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதில் கொள்ளையர்களின் 2 கைரேகைகள் சிக்கியது. இந்த கைரேகைகளை கொண்டு போலீசார் பழைய குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒப்பிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிரா ஏதேனும் உள்ளதா? எனவும் விசாரித்து வருகின்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News