தஞ்சை அருகே ரெயிலில் அடிபட்டு பெண் பலி
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள தளவாய் பாளையம் தண்டவாளம் அருகே 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கை, கால் சிதறி பிணமாக கிடந்தார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து தஞ்சை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேலன், தனிப்பிரிவு தலைமை காவலர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர்.
ஆனால் இறந்து கிடந்த பெண் யார் என்ற விபரம் தெரியவில்லை. திருச்சி- காரைக்கால் பயணிகள் ரெயில் இன்று காலை சென்றபோது ரெயில் வருவது தெரியாமல் அந்தப் பெண் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.