செய்திகள்
கோப்புப்படம்

திருமணத்தை நிறுத்தி மணமேடையில் புதுமாப்பிள்ளைக்கு அதிர்ச்சி கொடுத்த மணப்பெண்

Published On 2019-11-12 09:42 GMT   |   Update On 2019-11-12 09:42 GMT
சென்னையில் காதலனுடன் சேர்ந்து இளம்பெண் திருமணத்தை நிறுத்தியதால் புதுமாப்பிள்ளை அதிர்ச்சியடைந்தார்.
போரூர்:

சென்னை எம்.ஜி.ஆர். நகர் அடுத்த நெசப்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அயனாவரத்தை சேர்ந்த வாலிபருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கடந்த 10-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது.

முன்னதாக 9-ந் தேதி மாலை இருவருக்கும் அயனாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு விழா நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது மேடையில் இருந்த மணமகனின் ‘செல்போன் வாட்ஸ்அப்’பிற்கு தனக்கு மனைவியாக போகும் புதுப்பெண் வேறு ஒரு வாலிபருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ அடுத்தடுத்து வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் உடனடியாக வரவேற்பு விழா மற்றும் திருமணத்தை நிறுத்தினார். இதனால் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மணமகன் தனது திருமண விழாவிற்கு வந்த உறவுக்காரப் பெண் ஒருவரை மறுநாள் (10-ந்தேதி) திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் மணமகனுக்கு புகைப்படங்களை அனுப்பி மகளின் திருமணத்தை நிறுத்திய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளம்பெண்ணின் பெற்றோர் எம்.ஜி.ஆர். நகர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் விசாரணை நடத்தினார்.

இதில் அந்த இளம்பெண் வீட்டின் அருகில் உள்ள வாலிபரை காதலித்து வந்ததும், ஆனால், பெற்றோர் காதலை ஏற்க மறுத்து உடனடியாக வேறு ஒருவருடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததும் தெரிந்தது.

இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணும், காதலனும் சேர்ந்து திருமணத்தை நிறுத்த திட்டமிட்டனர். அதன்படி இளம்பெண், மணமகனின் செல்போன் எண்ணை காதலனிடம் கொடுத்து இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை அனுப்ப சொன்னதும் விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இளம்பெண்ணின் பெற்றோர் தனது மகளை காதலனுடன் சேர்த்து வைக்க சம்மதம் தெரிவித்து உள்ளதாக தெரிகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News