செய்திகள்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரம் மாற்றி அமைப்பு

Published On 2019-10-02 03:17 GMT   |   Update On 2019-10-02 03:17 GMT
பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:

நாடு முழுவதும் தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளை சீரமைக்கும் நோக்கில் இந்திய அரசின் நிதித்துறை பல்வேறு புத்தாக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரத்தை ஒரே மாதிரியாக மாற்றி அமைக்க இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பி.ஏ) முடிவு செய்து உள்ளது. தற்போது ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் மாவட்டத்திற்கு மாவட்டம் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப சேவை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன. பெரும்பாலான வங்கிகள் காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை மட்டுமே இயங்கி வருகின்றன.

இந்நிலையில் இந்திய வங்கிகள் சங்கம் பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரத்தை நாடுமுழுவதும் ஒரே மாதிரி மாற்றி அமைக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அந்த அறிக்கையில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை, காலை 10 மணி முதல் 4 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை என 3 வகையாக வாடிக்கையாளர் நேரத்தை அறிவித்து இதில் ஏதாவது நேரத்தை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக்கொண்டது.

இந்த சுற்றறிக்கையின் அடிப்படையில் தமிழக அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டம் கடந்த மாதம் 26-ந்தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர் சேவை நேரத்தை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஒரே மாதிரியாக இருக்கும்படி மாற்றி அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. வாடிக்கையாளர் சேவை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளிலும் நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ளது.

மற்ற வங்கிகளிலும் இந்த புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. மாற்றி அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறையின்படி வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 30 நிமிட சேவை நேரம் நீட்டிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News