செய்திகள்
நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் வழங்கியது ஐகோர்ட்
மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக நளினிக்கு மேலும் 3 வார காலம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த நளினி (வயது 52), தன் மகளின் திருமணத்திற்காக கடந்த மாதம் 25-ம் தேதி பரோலில் வந்தார். பரோலில் வந்த அவர், சத்துவாச்சாரியில் தங்கி தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்த நிலையில் நளினியின் மகள் ஹரித்ரா தமிழகம் வருவதில் தாமதம் ஏற்படுவதால், பரோல் காலத்தை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி 20-ம் தேதி மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், மகள் திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியாததால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பதற்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். மனுவை பரிசீலித்த நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
அதன்படி இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக மேலும் ஒரு மாதம் பரோல் கோரிய நிலையில், 3 வாரம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.