செய்திகள்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி பிரமுகர் தீக்குளிக்க முயற்சி

Published On 2019-06-17 13:11 GMT   |   Update On 2019-06-17 13:11 GMT
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி பிரமுகர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் போலீசாரின் தீவிர சோதனையையும் தாண்டி இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர்அணி செயலாளர் கார்த்திக்ராவ்போன்ஸ்லே மண்எண்ணை கேனுடன் வந்து கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு உடலில் மண்எண்ணையை ஊற்றியபடி நடந்து வந்து தீக்குளிக்க முயன்றார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். அதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது தஞ்சை கீழவாசல் வண்ணாந்துறை பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக சலவை தொழில் செய்து வரும் தொழிலாளர்களின் இடத்தை கைப்பற்றி ரியல்எஸ்டேட் மூலம் ரியல் எஸ்டேட் அதிபர் அடியாட்கள் மூலமும் மிரட்டியும், தாக்கியும் வருகின்றனர்.

இதுகுறித்து அனைத்து துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும், போலீசாரிடம் புகார் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வண்ணாந்துறையில் உள்ள தொழிலாளர்களை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

இதுகுறித்து மனு அளிக்க வண்ணாந்துறை பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களுடன் வந்திருந்தார். அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News