மதுரையில் பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 25 பவுன் கொள்ளை
மதுரை:
மதுரை நரிமேடு பி.டி.ஆர். நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 64) பொதுப்பணித் துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கடந்த 15-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு இளங்கோவன் குடும்பத்தினருடன் போடியில் உள்ள குல தெய்வம் கோவிலுக்கு சென்றனர். அங்கு தரிசனத்தை முடித்து விட்டு நேற்று மாலை அவர்கள் வீடு திரும்பினர்.
அப்போது வீட்டுக்குள் பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. இதனை பார்த்த இளங்கோவன் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் பின்பக்க கதவை உடைத்து யாரோ உள்ளே புகுந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், ரூ.2 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக போலீசில் இளங்கோவன் புகார் செய்தார். வீடு புகுந்து திருடிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.