செய்திகள்

மாதவரம் அருகே பணம் இல்லாததால் கடைக்கு தீ வைத்த கும்பல்- ரூ.10 லட்சம் பொருட்கள் நாசம்

Published On 2018-11-21 09:58 GMT   |   Update On 2018-11-21 09:58 GMT
மாதவரம் அருகே கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கும்பல், பணம் இல்லாததால் கடைக்கு தீ வைத்து சென்றனர். இதனால் ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாகின.
மாதவரம்:

மாதவரம் தபால் பெட்டி பகுதி அருகே விளையாட்டு பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருபவர் ஷேக்முகமது.

நேற்று இரவு அவர் விற்பனை முடிந்து கடையை பூட்டிச் சென்றார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஷேக் முகமதுவின் கடையில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. தீயும் பற்றி எரிந்தது.

தகவல் அறிந்ததும் மாதவரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

எனினும் கடையில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான விளையாட்டு பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் எரிந்து நாசமானது.

மாதவரம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கடையின் பூட்ட உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்து இருப்பது தெரிந்தது.

கடையில் பணம் இல்லாத ஆத்திரத்தில் கொள்ளை கும்பல் பொருட்களுக்கு தீ வைத்து தப்பி உள்ளனர்.

இதேபோல் அப்பகுதியில் உள்ள லோகநாதன் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையிலும் கொள்ளை முயற்சி நடந்து உள்ளது. பூட்டை உடைக்க முடியாததால் அங்கிருந்த கண்காணிப்பு காமிராவை திருடி சென்று உள்ளனர்.

மேலும் 3 கடைகளிலும் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

கொள்ளையர்களின் உருவம் அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News