செய்திகள்

திண்டுக்கல் கோவில்களில் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து நீதிபதிகள் சோதனை

Published On 2018-09-25 10:21 GMT   |   Update On 2018-09-25 10:21 GMT
திண்டுக்கல் கோவில்களில் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து நீதிபதிகள் திடீர் சோதனை நடத்தினர்.
திண்டுக்கல்:

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட அளவில் நீதிபதிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி முரளி சங்கர் தலைமையிலான நீதிபதிகள் குழுவினர் பழனி முருகன் கோவிலில் 2 நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் ரெயிலடி சித்திவிநாயகர் கோவில், மலைக்கோட்டை சீனிவாசபெருமாள் கோவில், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களிலும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் திண்டுக்கல் வாணிவிலாஸ் ரோட்டில் உள்ள வண்டிகாளியம்மன் கோவிலில் நீதிபதி முரளிசங்கர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

இந்த கோவில்களில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதி உள்ளதா? என்றும் ஊழியர்கள் எத்தனைபேர் பணிக்கு வருகின்றனர் என்றும் கேட்டறிந்தனர். தரிசனத்துக்காக கட்டணம் வசூலித்து அவர்களுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படுகிறதா? என்றும் கோவிலில் உள்ள கட்டிடங்கள் பாதுகாப்பாக உள்ளதா? எனவும் சோதனையிட்டனர்.

கோவில் வரவு செலவு கணக்குகள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதை கணக்கு பதிவேடு நோட்டுகளை பார்வையிட்டனர்.

இது தவிர கோவிலில் பக்தர்களுக்காக வழங்கப்படும் பிரசாதம் எந்த முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது, கோவிலில் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது என்றும் கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வின்போது தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நம்பி மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News