பாளையில் அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
நெல்லை:
பாளை கோட்டூர் ரோட்டில் உச்சினி மாகாளி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த கோவில் கொடை விழா நடந்து முடிந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டதோடு, காணிக்கையாக உண்டியலில் பணம் செலுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் நேற்றிரவு கோவிலில் வழிபாடு முடித்து அனைவரும் சென்று விட்டனர். நள்ளிரவு யாரோ மர்ம நபர் அங்கு வந்துள்ளான். கோவிலின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த அவன் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றான்.
கொடை விழா முடிந்ததால் உண்டியலில் ஆயிரக் கணக்கில் பணம் சேர்ந்திருக்கும் என தெரிகிறது. அதை மர்ம நபர் அள்ளி சென்றான். இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் முன்பக்க கதவும், உண்டியலும் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி பாளை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தார்கள். கொள்ளை நடந்த கோவில் அருகே கண்காணிப்பு கேமிராக்கள் ஏதும் உள்ளதா? அதில் கொள்ளையன் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.