செய்திகள்

தொப்பூர் அருகே தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி- போலீசுக்கு தெரியாமல் உடல் எரித்ததால் பரபரப்பு

Published On 2018-06-19 16:14 GMT   |   Update On 2018-06-19 16:14 GMT
தொப்பூர் அருகே தூக்கில் தொங்கியப்படி இருந்த கல்லூரி மாணவியின் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்ததால் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்லம்பள்ளி:

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே மேல்பூரிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. கூலி தொழிலாளி. இவருடைய மகள் குணா (வயது 21). நல்லம்பள்ளி அருகே உள்ள ஒரு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்து பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். திரும்பி வந்து பார்த்தபோது குணா உடல் தூக்கில் தொங்கியபடி கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் அவருடைய உடலை எடுத்துச்சென்று சுடுகாட்டில் எரித்து விட்டனர்.

இதுபற்றி ஜருகு கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் தொப்பூர் போலீசில் புகார் செய்தார். அதில், குணா இறந்தது குறித்து போலீசுக்கோ, வருவாய்த்துறையினருக்கோ தகவல் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குணா இறந்தது எப்படி? அவர் தற்கொலை செய்தாரா? அல்லது அவருடைய சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கல்லூரி மாணவி உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News